நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்!

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்!
ஒரு தொலைக்காட்சியின் வேட்பாளர் நேர்முகக் கலந்துரையாடல் நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. அதில் ஆளும் இயக்கத்தின் வேட்பாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

ஒரு பொது மக்கள் பிரதிநிதி மதுவிலக்கு பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ஆளும் தரப்பு வேட்பாளர் அளித்த பதில் இதோ இதுதாம்!
தமிழகத்தில் மதுக்கடைகளை தாங்கள் அங்கம் வகித்த பழைய இயக்கம்தான் திறந்து வைத்தது. நாங்கள் அதனை இப்பொழுது தொடர்கின்றோம். 

இரண்டு தலைமுறைகள் இதனால் நாசமாகிவிட்டன. இப்பொழுது எவர் குடிக்காமலில்லை? நீங்கள் வேண்டுமானால் டாஸ்மாக் கடைக்குச் சென்று பாருங்கள். அங்கு பெண்கள் கூட அமர்ந்து சர்வசாதாரணமாகக் குடிப்பதைக் காணலாம்.

நாங்கள் இந்த நிலையில் மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராய வியாபாரிகள் பெருகி விடுவர். ஆந்திரத்திலிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் கர்நாடகத்திலிருந்தும் மது வகைகளைக் கடத்திவந்து இங்கு விநியோகம் செய்பவர்கள் ஒரே நாளில் கோடீசுவரர்கள் ஆகிவிடுவர். எனவே எங்களால் மதுவிலக்கை இந்த நிலையில் அமல்படுத்த இயலாது என்று பதிலலித்தார்.
அவர் இந்த பதிலை உச்சரிக்கும்போது பெண்கள் கூட குடிக்கின்றனர் என்பதை சவால்விடுவது போலப் பேசியதுதாம் எம்முள் ஏராளமான வேதனை அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  

அவர் சொல்வது ஒரு வகையில் உண்மைதாம். அவர் அங்கம் வகிக்கும் இயக்கத்தின் முன்னோடிகள்தாம் தமிழகத்திலுள்ள மிகப்பெரிய மது ஆலைகளுக்கு உரிமையாளர்கள் என்பதும் மதுவிலக்கை அமல்படுத்தினால் அந்த ஆலைகளின் அபரிமிதமான வருமானம் அடியோடு தொலைந்து ஆலைகளை மூடிவிட நேர்ந்துவிடுமே என்ற அச்சமும்தான் அவரது வார்த்தைகளில் வெளிப்பட்டதே தவிர அவரே ஒப்புக்கொண்டது போல இரண்டு தலைமுறைகள் அடியோடு மது அரக்கன் பிடியில் சிக்கியதுடன் மூன்றாவது தலைமுறையும் மது எனும் படுபாதாளத்தில் வீழ்ந்து தமிழக ஒட்டுமொத்த பொருளாதார வளமும் நாசமாகிவிடுமோ என்ற அச்சம் அவருக்கு இல்லையெனினும் எம்முள் வேதனை அலைகளாக எழுகிறது.

இந்த உலகத்தில் சாதிக்க முடியாதது என எதுவுமே இல்லை என்பது சாதாரண குண்டூசி தொடங்கி விண்வெளிக்கு பயணப்படும் ராக்கெட்டுகள் வரை நம் கண் முன்னே நிரூபணமாகி வருகிறது. மனித உறுப்புகளைக்கூட புதியதாக உருவாக்குவதென்பது சாத்தியமாகி வருகின்ற காலகட்டம் இது.

ஆயின் மனிதனின் உள் உறுப்புகளை நாசம் செய்வதில் பிரதானமானதும் பொருளாதார வீழ்ச்சிக்கு வழி வகுப்பதும் பெண்களின் அளவற்ற துன்பங்களில் தலையாயதும் குடும்ப உறவுகள் சிதைவிற்கு முதலானதும் விபத்துகள் உணர்ச்சியவயப்பட்ட சண்டைகள் திருட்டு கொள்ளை கற்பழிப்பு என ஏராளமான சமூகச் சீரழிவுகளுக்குக் காரணமானதுவும் மதுதாம். 

இவ்வளவு கொடுமைகளுக்கும் காரணமாகும் மதுவினை ஒழிக்க இயலாதென்பவர்களைத்தான் அன்று திராவிட இயக்கத்தை வளர்க்கப் பாடுபட்ட மக்கள் திலகம் அவர்கள் பாடிய பாடல்களில் வரும் வரிகள் இவ்வாறு வர்ணிக்கிறது.

நீதான் ஒரு மிருகம் இந்த மதுவில் விழும் நேரம்!
உண்டால் மயக்கும் கள்ளானது அது உண்ணாத பேருக்கு முள்ளானது! 

மக்கள் திலகம் சுட்டிய மிருகங்களை உருவாக்கும் அரசாங்கங்கள்தாம் உண்மையில் விலங்கினும் கீழான காலில் குத்திய முட்கள் போன்றவர்கள். முட்களைக் களைவதும் விலங்குகளைத் திருத்துவதும் ஒட்டு மொத்த சமூகமும் திருந்த வேண்டும் என்ற உண்மையான அக்கறை உள்ள நல்லவர்கள் உருவானால்தான் முடியும்.

தமிழினத்தின் மூன்றாவது தலைமுறையும் அழிவதற்குள் விழித்திடுவோம். ஐந்தாம் தமிழ்ச்சங்கம் ஆளும் பொறுப்பேற்றால் முதல் வேலையே மதுக்கடைகளை மூடிவிடுவதற்கு பதிலாக அவைகளில் பணி புரியும் ஊழியர்கள் வேலையிழக்கும் நிலை உருவாக்காமல் அவைகள் தற்போது இருக்கும் நிலையிலேயே உயர் வகைப் பழவகைகள் மற்றும் பழச்சாறுகள் விற்பனை நிலையங்களாக மாற்றம் செயவதுதாம.

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் சிறையிலடைக்கப்பட்டு அவர்கள் திருந்தும் வரை அவர்களுக்கு உணவிற்கு பதில் அவர்கள் காய்ச்சிய சாராயம்தான் உணவாக வழங்கப்படும். இந்த தண்டனையில் இருந்து மதுவினை வெளிமாநிலங்களிலிருந்து கடத்துபவர்கள் அவர்களைக் கண்டு கொள்ளாத காவலர்கள் என எவரும் தப்ப இயலாது. 

இவர்களையும் மதுவின் பிடியில் வீழ்ந்து தவிக்கும் மக்களையும் காவல் துறையில் இனி அதிகளவில் இடம் பெறப்போகும் மனநல மருத்துவ அலுவலர்கள் வாயிலாகத் திருத்தும் பணியை ஐந்தாம் தமிழ்ச்சங்கம் மேற்கொள்ளும். 

மது விற்பனையால் வரும் வருமானம் எத்தனை கோடிகளாக இருந்தாலும் அது ஐந்தாம் தமிழ்ச்சங்க இயக்கத்தைப் பொருத்தவரை குடி குடியை மட்டுமல்ல ஆட்சியாளர்களையும் கெடுக்கும் என்ற பகுத்தறிவு உண்மையை உணராத விலங்குகள் ஆட்சி செய்யும் சாதாரண இயக்கமல்ல என்ற உண்மை உலகிற்கு உணர்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!