தமிழகத்தில் தொலைய வேண்டும்! அரசியல் தற்கொலைகள்!


தமிழகத்தில் ஆளும் இயக்கத் தலைவி அவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் கருநாடக வாய்மை மன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறை தண்டனை பெறப்பட்ட செய்தியை அறிந்ததும் தமிழகத்தில் ஆங்காங்கே தீக்குளித்தும், தூக்கிக்கிட்டுக் கொண்டும், மாரடைப்பாலும் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாக ஊடகங்கள் வாயிலாக அறிந்து ஐந்தாம் தமிழ்ச்சங்கம் அவர்தம் குடும்பத்தவர்க்கு தம் ஆழ்ந்த வருத்தங்களைப் பதிவு செய்கிறது!

தீக்குளித்தும், தூக்கிட்டும் மரணமடைந்தவர்களின் குடும்பங்களின் நிலையை எண்ணி இரக்க மனம் படைத்த எவருமே மனம் கலங்காதிருக்க மாட்டர்! விலை மதிப்பற்ற உயிர்களை ஊழல் அரசியல்வாதிகளின் உயர் செல்வாக்கு அறியாமல் அப்பாவியான வசதி வாய்ப்பற்ற மக்கள் தமது இன்னுயிர் துறப்பது இனியும் தொடரத் தமிழராய்த் தமிழகத்தில் பிறந்த எவரும் அனுமதிக்கக்கூடாது!

தற்கொலை செய்து கொண்டவர்கள் அனைவருமே வசதி குறைவானவர்கள் என்பதுவும், இது போன்றவர்கள் தங்களின் குடும்பச் சுமை தாளாமல் தங்களின் மரணத்திற்குப் பின்னர் கிடைக்கும் கட்சி நிதி உதவியிலாவது தங்கள் குடும்பத்தினரின் ஏழ்மை நிலை தொலையட்டும் என்ற நோக்கில் செயல்படுவதாகப் பரவலான கருத்தும் தமிழகத்தில் உள்ளதும் நாம் அறிந்ததே!

தற்செயலாக மாரடைப்பால் இறந்தவர்களைத் தங்களின் தலைவரின் நிலை கருதித் துககம் தாளாது மரணமுற்றதாக எண்ணிக்கைக்கென அரசியல் இயக்கங்கள் அவர்களுக்கும் நிதி உதவி அளிப்பதும் தமிழகத்தில் நிலவுகிறது!

இதை எனது சொந்த அனுபவத்திலேயே என்னால் உறுதிப்படுத்த முடியும்! எனது மூத்த தாய் மாமா அவர்கள் தற்போதய ஆளும் இயக்கத்தின் தீவிர ஆதரவாளர்! அவர் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சில நாட்களுக்குப் பிறகுதாம் இதே ஆளும் கட்சித் தலைவியார் டான்சி நில பேர ஊழல் வழக்கிற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார்! இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பின்னர் எனது மாமா அவர்கள் மரணமுற்றார்.

எனது மாமா அவர்கள் மரணமடைவதற்குச் சில மணி நேரங்கள் முன்பு நான் எனது நிறுவனத்தில் பணியிலிருந்தேன்! அவர் இருந்த நகருக்கும் எனது இருப்பிடத்திற்கும் 100 கல் தொலைவு! அப்பொழுது காலை பத்து மணி இருக்கும்! ஒரு நாய்க்குட்டி ஒன்று எங்கள் நிறுவனத்தில் நுழைந்துவிட்டு எவ்வளவு போராடியும் சற்றுச் சிணுங்கியவாறு வெளியேற மறுத்தது! 

என்னுடைய உள்ளுணர்வு இன்று ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என அப்பொழுது முதல் எச்சரிக்கத் துவங்கியது! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழிந்துதான் அந்தக் குட்டி நாயை எங்களால் அப்புறப் படுத்த முடிந்தது! அன்று மாலையே எனது மாமா இறந்து விட்டதாக எங்களுக்குத் தகவல் வந்தது!

பொதுவாக நம் ஆன்மீகத்தில் நாயை கால பைரவருக்கு ஒப்பிடுவர்! அன்றைய தினம் எனக்குக் கிடைத்த இந்த அனுபத்தின் போது எனது மாமா அவர்கள்தான் தனது மரணத்திற்கு முன்னர் நடந்த இந்த நிகழ்வால் தனது மரணத்தைக் கால பைரவர் வடிவில் வந்து உணர்த்தினாரோ எனவும் எனது தாய் மாமா 
அவர்களின் மரணத்தில் இன்றுவரை எனக்குள் ஒருவித தீராத சந்தேகமும் இருந்து வருகிறது!

அதன் பின்னர் இயக்கத் தலைவியின் கைது காரணமாகத் துக்கம் தாளாமல் மாரடைப்பால் காலமானதாக எனது தாய் மாமா பெயரும் இடம் பெற்ற ஒரு இரங்கல் அறிக்கை செய்தித் தாள்களில் வந்ததும், சில மாதங்கள் கழிந்து எனது மாமா குடும்பத்தவர்கள் அனைவரும் தலைநகருக்கு இயக்க செலவில் அழைத்துச் செல்லப்பட்டு தங்குவதற்கும் வசதி செய்து தரப்பட்டு பின்னர் ஒரு தொகையும் அவர்களிடம் ஆடம்பரமாக நடத்தப்பட்ட விழாவில் வழங்கப்பட்டது!

அரசு வழங்கும் இலவசங்களை வாங்கக்கூடாது என்ற எனது கொள்கையை மீறி இரண்டாயிரம் ரூபாய் பெறாத நீண்ட நாள் உழைக்காத ஒரு சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியையே எனக்குத் தெரியாமல் அக்கம்பக்கத்துக் குடும்பங்களின் தூண்டலின் பேரில் வாங்கிவிட்டு என் மனைவி என்னிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட தற்கால நிலைமை இப்படி இருக்க ஆளும் இயக்கத்தின் தலைவி என்பதை விட ஒரு முதல்வரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் அத்துடன் கணிசமான தொகை உதவி என்றால் எவர்தாம் இந்த வாய்ப்பினை நழுவ விடுவர்!

இரண்டுமுறை மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும் இன்றுவரை நலமாக இருக்கும் எனது தாயாரை விட ஐந்து வயது குறைநத எனது தாய்மாமா அவர்களுக்கு வாழ வேண்டிய வயதிலேயே வாய்க்கரிசி போட்டுவிட்டு நான் வந்தபோது நடந்த உண்மை நிகழ்ச்சி இது!

இதை அழுத்தமாக நான் எழுதுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு! எனது தந்தை தனது முதுமையிலும் ஓரளவு எனது தாயாருக்காகத் தனது மரணத்திற்குப் பின் ஒரு தொகையை ஒதுக்கிவிட்டுத்தான் மறைந்தார். அவருக்கு நாங்கள் நான்கு பேர் கல் போல உயிரோடு இருக்க, ஆளும் அரசியல் இயக்கத்தவர்கள் எனது தாயாரை அனாதை எனச் சொல்லி அரசிடம் விதவை உதவித் தொகை வாங்கித் தருவதாக வாக்கு வங்கியை மனதில் கொண்டு அணுகியுள்ளனர்.

கிராமத்தில் வாழ்ந்த எனது அப்பாவித் தாயார் எங்களிடம் இது பற்றி வினவ எங்களுக்குக் கடும் கோபமேற்பட்டு நாங்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையில்தான் நீங்கள் அனாதையாவீர்கள்! நாங்கள் குத்துக்கல் போல உயிரோடு இருக்கும் வரை இது போன்ற அரசியல் அனாதைகளின் பேச்சைக் கேட்டு இது போன்ற தவறான அரசு உதவிகளை வாங்கிவிட வேண்டாம் என எச்சரித்து வந்தோம்! 

வாய்மை ஒரு நாள் நிச்சயம் ஆட்சி பீடம் ஏறும் போது இது போன்ற பொய்மை அரசியல்வாதிகள்தாம் ஒரு கால கட்டத்தில் அனாதைகளாகப் போகின்றனர் என்பது எழுதி வைக்கப்பட்ட பேரண்ட விதி! இந்த விதியிலிருந்து எவருமே நான் உட்பட ஏதேனும் குற்றம் செய்தால் தப்பவே இயலாது என்பதை இனியாவது போலி அரசியல்வாதிகள் உணர வேண்டும்!

இயக்கத்தில் நல்ல பதவியில் அமர்ந்து கொண்டு செல்வாக்காகத் திகழ்பவர்கள், ஒரு கட்டத்தில் தங்களின் பதவி பறிக்கப்பட்டாலோ, அல்லது தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டாலோ சர்வ சாதாரணமாகத் தங்களின் கொள்கைக்கு இந்த இயக்கம் ஒத்துவரவில்லை என ஒரு அறிக்கை கொடுத்து விட்டு அது வரை தாங்கள் அசிங்கமாகப் பேசிய எதிர் இயக்கத்திற்கு கரை வேட்டியும் துண்டையும் மாற்றிக் கொண்டு பச்சோந்தி குணத்துடன் நிறம் மாறிச் செல்வதும், அவர்களும் இவர்களின் செல்வாக்கிற்கெனத் தங்களை நிந்தித்ததை மன்னித்து ஏற்றுக் கொள்வதையும் இது போன்று அப்பாவித் தொண்டர்கள் சற்றேனும் எண்ணிப் பார்க்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும்!

அது போன்றே அரசியல் இயக்கங்களில் நல்ல செல்வாக்குடன் பதவியில் உள்ள எவரும் இது போன்று தற்கொலை எண்ணங்களைக் கொண்டிருப்பதில்லை என்பதையும், அவர்கள் தங்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதெற்கெனத் தங்களின் இலஞ்சப்பணத்தை வாரி இறைத்து, கட்அவுட்டுகள், சுவரொட்டிகள், காசு கொடுத்து ஆட்களைத் திரட்டி மொட்டையடித்தல், பால்குடம் ஏந்துதல், அங்கப் பிரதட்சணம் செய்தல், அலகு குத்துதல், மனித சங்கிலி அமைத்தல், ஆடம்பர மேடை போட்டு முழங்குதல், உண்டு கொண்டே உண்ணாவிரதம் இருத்தல் என விதவிதமான செய்கைகளில் ஈடுபட்டு தலைமையிடம் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்பாகவும்தான் இவைகளைப் பயன்படுத்துகிறார்களே தவிரத் தங்களைப் போல உணர்ச்சி வசப்பட்டு இன்னுயிர் மாய்த்துக்கொள்ள முன்வருவதில்லை என்பதை அப்பாவிகள் உணரும் நிலை உருவாக்கப்பட வேண்டும்!

ஆளும் இயக்கத் தலைவியின் சிறைத் தண்டனையை அறிந்தவுடன் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் தாங்கள் செய்வது கொடிய பாவமென்று நினையாமல் அதன் எதிர் விளைவுகள் இன்னதென்று அறியாமல் ஒரு பேருந்தை எரித்து அதில் மூன்று அப்பாவிக் கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்துக் கொன்று அதற்கெனத் தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ள நிலையும், இளமையில் சிறை சென்று இன்று வயதான கோலத்தில் தங்களின் குழந்தைகளையும் குடும்பத்தையும் பிரிந்து மரண பயத்துடன் வாழும் சாதாரண இயக்கத் தொண்டர்களின் கதியை ஊடகங்கள் இடைவிடாது வெளியிட்டு உணர்ச்சி வயப்பட்டு இன்னுயிர் நீக்குபவர்கள், மற்றும் உணர்ச்சி வயப்பட்டு பேருந்துகளை எரிப்பவர்கள், தனியார் மற்றும் பொதுச் சொத்துகளை நாசமாக்குபவர்களை எச்சரிக்கும் வழியை ஏற்படுத்த வேண்டும்!

தீக்குளித்தல், இயக்கத்திற்கெனத் தூக்கிட்டு மரணமடைபவர்களின் குடும்பத்திற்கு அரசியல் இயக்கங்கள் தரும் நிதி உதவிகள் அப்பாவிகளைத் தற்கொலைக்குத் தூண்டுவதாக அமைவதாகவும், இவ்வாறு நிதி வழங்கும் இயக்கங்களின் தேர்தல் உரிமம் கொலைக்குற்றமாகக் கருதி இரத்து செய்யப்படும் எனவும் கடுமையான ஒரு சட்டமே  உச்ச வாய்மை மன்றத்தால் இயற்றப்படும் நிலை இனியாவது இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்!

அப்பொழுதான்; ஊழல் அரசியல்வாதிகளின் செயல்களுக்காக அப்பாவிகள் தற்கொலை செய்து கொண்டு பலியாவதும் இவர்களின் எரியும் தேகத்தில் போலி அரசியல்வாதிகள் குளிர் காயும் அநாகரீகச் செயல் நிரந்தரமாகத் தொலையும் நிலை இந்த நாட்டில் உருவாகும்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!