தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கப்போவது யார்?

தமிழகத்தில் வரும் 2016 ஆம் ஆண்டுக்கான தேர்தல் உத்திகளை அனைத்து அரசியல் இயக்கங்களும் துவக்கி விட்டன. 

தமிழகத்தில் 1 முதல் பத்து வரை வாக்கு சதவிகிதம் உள்ளதாகக் கருதக்கூடிய (இந்த சதவிகிதம்கூட அவை தமிழகத்தின் ஏதேனும் பிரதானமான திராவிட இயக்கத்தின் தோள் மீது அமர்ந்து அவர்களுடைய வாக்கு வங்கியையும் சேர்த்துத்தான் என்பது பாமரனுக்குக்கூட மிக நன்றாகத் தெரிந்த கதை)

உதிரி இயக்கங்கள் இப்பொழுதே தாங்கள்தான் அடுத்து தனித்துப் போட்டியிட்டு ஆட்சியைப் பிடிப்போம் என அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆளும் இயக்கம் சரமாரியான இலவசத் திட்டங்களையும் இறுதி நேரத்து அறிவிப்புகள் வாயிலாக புதிய திட்டங்களையும் அறிவித்துக் கொண்டிருக்கின்றது. இந்தத் திட்டங்களுக்கான தொகை உண்மையிலேயே அரசின் கருவூலத்தில் உள்ளதா என்பதை யாமறியோம்.

பிரதான எதிரி  திராவிட இயக்கமோ தங்களின் பழைய தவறுகளை மக்கள் மறந்துவிட்டதாகக் கருதிக் கொண்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை உட்கட்சிப் பூசல்களுக்கிடையே வகுத்து வருகிறது. 

நிதிக் குடும்பமாகத் திகழும் இந்த இயக்கத்தின்  தேர்தல் நிதி வசூல் பல கோடிகளில் உள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தனித்துக் களம் இறங்குவதாக அறிவித்துள்ள சில்லறை இயக்கங்கள் தேர்தல் நெருங்கும் வேளையில் நிச்சயம் ஏதேனும் ஒரு திராவிட இயக்கத்தின் தோள் மீது ஏறுவது திண்ணம். 

தேர்தல் அறிக்கைகளில் இலவசத் திட்டங்களை அறிவிக்கும் இயக்கங்களின் போக்கினை தேர்தல் ஆணையம் கட்.டுப்படுத்தாத காரணத்தால் இருக்கின்ற அனைத்து இயக்கங்களும் ஏராளமான இலவசத் திட்டங்களை அறிவித்து ஓட்டு வங்கியை வளைக்க வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன.

தேர்தல் திருவிழா துவங்கியதும் ஏராளமான ஆடம்பரச் சொகுசு வாகனங்களின் அணி வரிசைகள் சூழ  அரசியல் தலைவர்கள் பவனி வந்து வாக்குச் சேகரிக்கத் துவங்குவர். தங்களின் பயணத்திற்கு இவர்கள் செய்யும் இடையூறுகளை மக்கள் சகித்துக் கொள்ளப்போவது கண்கூடாக இப்பொழுதே தெரிகிறது.

சமீபத்தில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் வழியாக ஓமலூர் செல்லும் பேருந்தில் அருகில் பயணித்த ஒரு முதியவர் உரையாடியது இன்றும் காதுகளில் ஒலிக்கிறது. 

உரையாடலின் சாரம் இதுதாம். 

பெருந்தலைவர் முதல்வராக இருந்தபோதுதான் திராவிட இயக்கம் தலையெடுத்தது. முதல் நாள் சேலத்தில் அமைக்கப்பட்ட எளிமையான மேடையில் அண்ணா அவர்கள் காங்கிரசு ஆட்சியை நாகரீகமாகக் குறை கூறிப் பேசினார்.

அடுத்த நாள் அதே மேடையில் பெருந்தலைவர் அவருக்கே உரிய பாணியில் அண்ணா அவர்களின் கேள்விகளுக்கு உரிய பதிலை நாகரீகமான வார்த்தைகளில் பதிலுரைத்தார். 

முதல் நாள் போட்டு அடுத்த நாளும் அதே எளிமையான மேடையைக்கூட அந்நாளில் பங்கிட்டுக் கொண்ட இயக்கங்களை நான் கண்டிருக்கிறேன். 

அதே போல பெருந்தலைவர் ஒரு முறை காரில் சேலம் வந்தார். அவருடைய வாகனத்திற்கு முன்பு ஒரே ஒரு காவல் வாகனம் மட்டுமே வந்தது. 

தேநீர்க்கடையில் தேனீர் அருந்திக் கொண்டிருந்தவர்கள் அதோ காமராசர் செல்கிறார் என்றபோதுதாம் ஒரு முதல்வரின் வாகனம் அந்த வழியாகச் செல்வதையே என்னால் காண முடிந்தது. 

அவ்வளவு எளிமை. எந்தக் காலத்திலும் அத்தகைய எளிமையை இனி வரும் தலைமுறை இப்போதுள்ள அரசியல்வாதிகளிடம் காணவே இயலாது என்று அந்த முதியவர் வேதனையுற்றார்.

தந்தை பெரியார் அவர்கள் அரசியலுக்கு வந்து சொத்து சேர்த்தவர்கள் தாங்கள் இந்த சமுதாயத்திற்காகக் கடுமையாகப் பாடுபட்டேன் எனச் சொன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது என ஆணித்தரமாக பேசியும் எழுதியும் பதிவு செய்துள்ளார்.

இன்று அவரால் வளர்ந்தவர்கள் ஆடம்பரமான மேடைகள் அமைத்து பிரம்மாண்டமான கார் அணிவரிசைகள் பின்தொடரப் பயணித்து தேர்தல் வாக்கு கேட்கப் போகின்றனர்.

அதற்கு முன்னோட்டமாக மக்களைச் சந்திக்கிறேன் என்று ஒவ்வொரு இயக்கத் தலைவரும் தொகுதி வலம் வரத் துவங்கிவிட்டனர்.

இதற்கு இவர்கள் மக்களை எளிமையாகச் சந்திப்பதாக கையாளும் உத்திதான் இப்பொழுது பரவலாக நாடு முழுவதும் காணப்படுகிறது.

மகளிர் சுய உதவிக்குழு, மாணவர் அணி, விவசாய அணி என இரகம் வாரியாக இவர்கள் பட்டியலிட்டுச் சந்திப்பது அவரவர் இயக்கம் சார்ந்த அணிகள்தாம் என்பது பாவம் பாமர மக்களுக்கு வேண்டுமானால் புரியாமல் போகலாம். 
படித்தவர்கள் மத்தியில் இது எடுபடாதென்பது உள்ளங்கை நெல்லிக்கனி! 

இந்தத் தேர்தல் முன்னோட்ட உலாவிலும் ஏராளமான ஆடம்பர சொகுசு வாகனங்களின் அணிவகுப்பு நிச்சயம் தென்படுகிறது.

மக்கள் இவர்களின் ஆடம்பர அணிவகுப்பிற்கும் இந்த உலாக்களுக்கும் செலவிடும் தொகை இவர்கள் உண்மையாக வியர்வை சிந்தி உழைத்த பணத்தில் செலவிடப்படுவதா என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

மோசமான சாலைகள், அதிகக் கட்டணத்தில் பயணிக்கும் புளி மூட்டைப் பேருந்துப்பயணம், ஊழல் நிறைந்த மக்கள் நலத் திட்டங்கள், கட்டுப்படுத்த இயலாத விலைவாசி உயர்வு, அரசியல் மற்றும் களவுக்கென நடத்தப்படும் கொலைகள் என நாள்தோறும் நாட்டில் நடக்கும் ஏராளமான சமூகச் சீரழிவுகளை மறந்துவிட்டு 

இலவசங்களுக்கும், தேர்தல் நாளுக்கு முதல் நாள் அரசியல் இயக்கங்கள் வழங்கும் பணத்திற்காக வரும் சட்டமன்றத் தேர்தலிலும் ஆசைப்பட்டு மக்கள் வாக்களித்தால் 

தமிழகத்தில் ஏதேனும் ஒரு வலிமையான ஊழல் இயக்கம் நிச்சயம் ஆட்சி பீடம் ஏறும், மற்ற இயக்கங்கள் தோல்வியைத் தழுவியதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டாலும்

தோற்கப்போவதும் தோற்றுவிட்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஊழல் அரசியல்வாதிகளின் போக்கினைச் சகித்துக் கொண்டு வாழப் பழகிக் கொள்ளப்போவது 

நிச்சயமாக நம் தமிழக ஏமாளி வாக்காளர்கள்தாம் என்பதை இப்போதைக்கு எம்மால் வேதனையாகத்தாம் இங்கு பதிவு செய்ய இயலும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!